புதன், 16 ஜூன், 2010

கடவுளின் கடவுளாக........



நீ  எல்லாமுமாகா யிருந்தும்
எதோ ஒன்றாக ஏன்  நினைத்தாய் ?

கோடான கோடிகளும் உன்னுள் இறைந்து கிடக்க 
சில சில்லறைகளை  ஏன் பொறுக்கி கொண்டுள்ளாய் ?

உன் உறவின்றி எதுவும் நடவாத போதும்
சில பந்தங்களை மட்டும் உறவென்று ஏன் கொண்டாய் ?

காதல் இன்றி கண நேரமும் நீ இல்லாத போதும்
காதலுக்காக பெண் துணை வேண்டுமென ஏன் கனவு காண்கிறாய்?

ஒவ்வொரு கணமும் காமத்தில் முழ்கி திளைக்க முடிந்தும்
ஒரு சில கணங்களுக்காக மட்டும் ஏன் இன்று  அலைகிறாய் ?

உன் ராஜ்யத்தில் எதிரிகளே இல்லாத போதும்
யாரை வெல்வதற்காக ரௌத்திரம் பழகி கொண்டுள்ளாய் ?

 உன் உள் அமைதி சொல்லாத கோடி சொல்லுமே ...
வெற்று விளம்பரம் மூலம் இன்று  என்ன சொல்ல விளைகிறாய் ?

வர்ணம் ஏதுமற்று வெறுமை எனும் நிறம் கொண்டவனாய் இருந்தும் 
 உன் வர்ணம் உயர்ந்தது  என்று  ஏன் உளறி கொட்டி கொண்டுள்ளாய்?

கடவுளின் கடவுளாக  நீ  எல்லாம்  கடந்திருந்தும்
மனிதநாய்  கடவுளை படைத்தும் ஏன்  குரைத்தும்  கொண்டுள்ளாய்?

பலமுறை அமுதம் பருக நீ  போன போதும்
கானல் நீரையே அமுதம் என நினைத்து ஏன் திரும்ப இங்கு வந்தாய் ?

எல்லாமும் உன்னிடம் இருந்தும்   
எதோ ஒன்றாக நினைத்ததுதான்  நீ செய்த  தவறா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக